ஓஎன்ஜிசியின் புதிய எண்ணெய் கிணறு பணிக்கு எதிர்ப்பு... திருவாரூரில் கடையடைப்பு!
ஓஎன்ஜிசி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் 8 கிராமங்களில் இன்று கடையடைப்பு நடைபெற்று வருகிறது.
திருவாரூர்: திருவாரூரில் ஓஎன்ஜிசி புதிதாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் விவசாய நிலத்தின் நடுவில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஓஎன்ஜிசி புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கான குழாயை பதிப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. கமலாபுரம், எருக்காட்டூர், கொரடாச்சேரி, வெள்ளங்குடி, அடியக்கமங்கலம், களப்பால் போன்ற 100 இடங்கள் எண்ணெய் கிணறு அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளனர்.

இதன் அடுத்தகட்டமாக நன்னிலத்தை அடுத்த தென்னஞ்சேரி கிராமத்தில் விவசாய நிலத்தின் நடுவில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு திருவாரூர் மாவட்டத்தின் 40 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு நடுவே எண்ணெய் கிணறு பதிக்கும் ஓஎன்ஜிசிக்கு எதிராக திருவாரூர் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு நடைபெறுகிறது. நன்னிலம்,ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்தோர் இந்த கடையடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications