தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 3 பெண் விவசாயி உள்பட 9 பேர் மரணம்.. கும்பகோணத்தில் மட்டும் 4 பேர்
கும்பகோணத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 4 விவசாயிகள் உயிரிழந்துள்ளது பெரும் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பெண் விவசாயிகள் உள்பட 9 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். கும்பகோணத்தில் மட்டும் இன்று ஒரே நாளில் 4 விவசாயிகள் உயிரிழந்துள்ளது பெரும் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் குளங்கள், ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் மனமுடையும் விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலை செய்துகொண்டும் மாண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், வெங்கத்தான்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விஜயகுமார் வயிலில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரையை சேர்ந்த விவசாயி பத்மாவதி. 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர் வர்தா புயலால் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பத்மாவதிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள நைனார் பாளையத்தை சேர்ந்த விவசாயி ஜமீன்தார். தமது விளை நிலத்தில் காய்ந்து போன பயிர்களை கண்ட அவர், வயிலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த தென்கிருஷ்ணாபுரத்தில் விவசாயி சுசீலா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நிலத்தில் விளைச்சல் இல்லாததால் மனமுடைந்த சுசீலா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே பயிர் கருகியதால் லட்சுமி என்ற விவசாயி உயிரிழந்துள்ளார்.
கும்பகோணம் அருகில் உள்ள தத்துவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி முகமது அன்சாரி. உக்கரை என்ற இடத்தில் மூன்று ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். பருவமழை பொய்த்ததால் போதிய தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் காய்ந்துள்ளன. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான முகமது அன்சாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாகக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் நேற்று இறந்தார்.
அதேபோல் ரெங்கநாதபுரத்தில் வசித்து வந்த விவசாயி பெருமாள், 2 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தார். அறுவடை செய்யப்படும் தருவாயில் நீரின்றி பயிர்கள் கருகத் தொடங்கியதால், கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் அவர் இருந்துள்ளார். சோகத்துடன் வயலுக்குச் சென்ற விவசாயி பெருமாள் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவிடைமரூதூர் தாலுகா கீழ மருத்துவகுடியை சேர்ந்த விவசாயி உத்திராபதி. இவரது விளை நிலம் பயிரின்றி கருகியதால், மனமுடைந்த உத்திராபதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் சோழன்மாளிகையை சேர்ந்தவர் மகாதேவன். பயிரி சாகுபடிக்கு நீர் இல்லாததால் பயிர்கள் கருகியதை கண்டு மனமுடைந்த விவசாயி மகாதேவன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மன வேதனையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பெண் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் கும்பகோணத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் தொடர் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.