சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு காலியிடங்களை நிரப்பும் வகையில் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் இன்று பதவியேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
புதிதாக 6 நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இதன்படி, வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணகுமார், ஹைகோர்ட் தலைமை பதிவாளர் பொன்.கலையரசன், மாவட்ட நீதிபதி (ஓய்வு) பி.கோகுல்தாஸ் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. இதையடுத்து, புதிய நீதிபதிகள் 6 பேரும் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு பதவி ஏற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் ஆந்திரா, அலகாபாத், டெல்லி ஹைகோர்ட்டுகளில் இருந்து தலா ஒரு நீதிபதி வீதம், 3 நீதிபதிகளை சென்னை ஹைகோர்ட்டுக்கு மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது. இந்த முடிவினை ஏற்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களும் விரைவில் பதவியேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.