தொடரும் அதிரடி.. தினகரன் ஆதரவாளர்கள் மேலும் 9 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு!
தினகரன் ஆதரவாளர்கள் மேலும் 9 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் மேலும் 9 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுகவில் அவருக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை கட்சி தலைமை நீக்கி வருகிறது.

இதுவரை 150க்கும் மேற்பட்ட தினகரனின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தினகரனின் ஆதரவாளர்கள் மேலும் 9 பேரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கட்சி தலைமை விடுத்துள்ள அறிக்கையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 9 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோதாண்டபாணி, வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர் பொறுப்பில் இருந்து ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் தினகரனின் ஆதரவாளர்களான கலைச்செல்வன், கதிர்காமு, எஸ்.ஜி.சுப்பிரமணியன், மாரியப்பன் கென்னடி, எஸ்.முத்தையா, ஆர்.சுந்தரராஜ் மற்றும் விளாத்திக்குளம் ஒன்றிய இணைச்செயலாளர் உமா மகேஸ்வரி ஆகிய 9 பேர் அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications