மத்திய அரசு அலுவலகங்களில் வெளிமாநிலத்தவர் வெளியேறக் கோரி போராட்டம்... 500 பேர் கைது
திருச்சி: தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் திருச்சி ரயில் நிலையத்தில் பெ, மணியரசன் தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பெ. மணியரசன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெ மணியரசன் கூறியதாவது: அந்தந்த மாநிலங்களின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களில் 60 சதவீதத்தினர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், 20 லிருந்து 30 சதவீதத்தினர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இதனால் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தை காக்க முடியாமல் போய்விடுகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணி புரியும் வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழர்கள்தான் இருக்க வேண்டும். தமிழ்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும்,
ஏற்கனவே, கர்நாடகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களே இருக்க வேண்டும் என்று சரோஜினி மகிஷ் குழு பரிந்துரை செய்துள்ளது. அதனை அம்மாநில அரசு ஏற்று நடைமுறைப்படுத்தி வருகிறது. அதைப் போன்றே தமிழ்நாட்டிலும் மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழர்களை நியமிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசுக்கு வேண்டுகோள் கடிதம் கொடுத்திருக்கோம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புகுந்து போராட்டம் நடத்துவார்கள்.
இவ்வாறு பெ. மணியரசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications