3 தொகுதி இடைத்தேர்தல்.. 91 வேட்புமனுக்கள் ஏற்பு - தேர்தல் ஆணையம்
3 தொகுதி இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் நடந்தது. அதிக அளவில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சீனிவேலு, மரணமடைந்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அக்டோபர் 26ம் தேதியன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. நவம்பர் 2ம் தேதி மாலை 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தஞ்சாவூர் தொகுதியில் 36 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 59 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 44 பேரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இறுதியில் 91 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 36 மனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 59 மனுக்களில் 46 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தததில் 30 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications