சென்னையில் 9வது தண்ணீர் கண்காட்சி.. பிப்ரவரி 26 முதல்
சென்னை: சென்னையில் 9 ஆவது தண்ணீர் கண்காட்சி பி்ப்ரவரி 26ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து வாட்டர் டுடே அமைப்பின் நிர்வாக இயக்குநர் எஸ்.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையைச் சேர்ந்த வாட்டர் டுடே என்ற தனியார் நிறுவனம் வாட்டர் எக்ஸ்போ - 2015 என்ற கண்காட்சி, வாட்மேன்- 2015 என்ற சர்வதேச கருத்தரங்கு ஆகியவற்றை நடத்துகிறது.

சென்னையில் 9 ஆவது முறையாக நடைபெறும் தண்ணீர் கண்காட்சி, பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம்.
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில், இந்தத் தண்ணீர் கண்காட்சி நடத்தப்படுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைப்பார்கள். ஜப்பான், சீனா, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.
இதில் சுமார் 17 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200 க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தண்ணீர், கழிவுநீர் மேலாண்மை, மறுசுழற்சி, தண்ணீர் வினியோகம், போக்குவரத்து, குடிநீர் சுத்திகரிப்பு, மேலாண்மை, கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் இயந்திரங்கள், உற்பத்தி பொருள்களை காட்சிக்கு வைக்க உள்ளனர்.
வாட்மேன் - 2015 என்ற தண்ணீர் ஆதாரம், பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெறும். இதில் தண்ணீர் துறையில் கடைபிடிக்க வேண்டிய சர்வதேச தொழில்நுட்பங்கள், மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். பல்வேறு தலைப்புகளில், தண்ணீர் துறைச் சார்ந்த வல்லுனர்கள் உரையாற்றுவர்.
அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் நிர்வாகத்தில் ஏற்படும் சவால்களை எப்படி சமாளிப்பது என்பதும் குறித்தும் விவாதிக்கப்படும். பிரான்ஸ், சிங்கப்பூர், கனடா, சீனா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து, தண்ணீர், கழிவுநீர் மேலாண்மை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications