ஹார்மோன் மாற்றத்தால் 2 வயது ஆண் குழந்தைக்கு தாடி, மீசை...
விழுப்புரம்: விழுப்புரத்தில் 2 வயது ஆண் குழந்தைக்கு ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் தாடி, மீசை முளைத்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தைக்கு உடலில் திடீர் மாற்றங்கள் உண்டாகி இருப்பதாகவும், முகத்தில் பெரியவர்களைப் போல் மீசை, தாடி போன்றவை முளைத்திருப்பதாகவும் கூறி அவனது பெற்றோர், அவனை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவனைப் பரிசோதனை செய்த ஹார்மோன் துறை உதவி பேராசிரியர் டாக்டர் சதீஷ், அவனது உடலில் ஹார்மோன்கள் மிகவும் அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தார். மேலும், ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹார்மோன்களின் தலைமையிடமான ஹைப்போத்தாலமசில் ஒரு கட்டி வளர்ந்திருப்பதும் தெரியவந்தது.
முதற்கட்ட சிகிச்சையாக அவனுக்கு ஹார்மோன்களை கட்டுப்படுத்த 3 மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு மருந்துகள் ஊசி மூலம் மருத்துவர்கள் செலுத்தினர். ஆனால் அது முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், அந்த மருந்து இன்னும் 10 முதல் 12 வருடங்களுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும். அத்தோடு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அந்த மருந்தின் விலையும் அதிகமாகையால், பெற்றோர் பணப்பிரச்சினையில் சிக்கி அவதிப்பட்டனர்.
எனவே, சிறுவனின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வளிக்க முடிவு செய்த மருத்துவர்கள், மூளையின் அடிப்பகுதியில் இருந்த கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றத் தீர்மானித்தனர். அதன்படி, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் ரூபேஷ்குமார் தலைமையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது.
அறுவைச்சிகிச்சையின் வெற்றியைத் தொடர்ந்து, இனி சிறுவனின் ஹார்மோன் அளவு வயதுக்கு ஏற்ப சரியாக காணப்படுகிறது. இனி அவனுக்கு ஊசி மருந்து தேவைப்படாது என மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications