ரூ. 274 கோடி வங்கி மோசடி: சி.பி.ஐ புகாருக்கு ஏ.சி.முத்தையா மறுப்பு
சென்னை: ரூ. 274 கோடி வங்கி மோசடி புகாருக்கு தொழிலதிபர் ஏ.சி முத்தையா மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் பெயரளவுக்கே தாம் தலைவராக இருந்ததாக தெரிவித்துள்ளார். சிபிஐ நடத்திய சோதனையின்போது, முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஏ.சி முத்தையா கூறியுள்ளார்.
274 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஐ.டி.பி.ஐ. வங்கி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உட்பட 8 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் செலுத்தி ஏமாற்றியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஃபர்ஸ்ட் லீசிங் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சி.பி.ஐ அதிரடி சோதனை
இந்த வழக்கில் ஏ.சி. முத்தையா உட்பட 8 பேர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. பெங்களூரில் இருந்து வந்த சி.பி.ஐ. போலீஸ் அதிகாரிகள் சென்னையில் 7 இடங்களிலும், ஹைதராபாத்தில் ஒரு இடத்திலும் நேற்று காலை முதல் இரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சி.பி.ஐ புகார்
புகார் கூறப்பட்ட சென்னை நிறுவனத்தில் புகார் கூறப்பட்ட காலகட்டத்தில் சேர்மனாக தொழில் அதிபர் ஏ.சி.முத்தையாவும், மேலாண்மை இயக்குனராக பரூக்இரானி என்பவரும், சீனியர் துணை தலைவராக டில்லிராஜூவும், தலைமை பைனான்ஸ் அதிகாரியாக சிவராமகிருஷ்ணா என்பவரும் செயல்பட்டுள்ளனர் என்றும் எனவே அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் சி.பி.ஐ.தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசி முத்தையா மறுப்பு
இந்நிலையில், வழக்கு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஏ.சி. முத்தையா, குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் பெயரளவுக்கே தாம் தலைவராக இருந்ததாக தெரிவித்துள்ளார். சிபிஐ நடத்திய சோதனையின்போது, முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஏ.சி முத்தையா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications