கோவை: புதிதாய் குடிபுகுந்த வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி
கோவை: புதிதாக கட்டிய வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
கோவை நகரிலுள்ள செல்வபுரத்தில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியின் மகன் சந்தோஷ்க்கு 2 வயது. குமார் அசோக் நகரில் காட்டியுள்ள தனது புதிய அடுக்குமாடி வீட்டில் கடந்த வாரம் குடியேறினார்.
நேற்று மாலையில் குமாரின் மனைவி செல்வி அவர்களது இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டின் மேல்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, படியிலுள்ள பக்கவாட்டு கம்பியைப் பிடித்து விளையாடிய போது கம்பியை பிடித்திருந்த குழந்தையின் கை வழுக்கியதால் சந்தோஷ் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தான்.
இதில் சந்தோஷின் தலையில் பலத்த அடிபட்டது. அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டுபோய் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை சந்தோஷ் மரணமடைந்தான்.
இதுகுறித்து, கோவை செல்வபுரம் காவல்துறை எஸ்.ஐ. சிவராஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். புதிதாக கட்டிய வீட்டில் குடியேறிய ஆறாவது நாளே நடந்த இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பலரிடமும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.