ஓசூர் பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த கல்லூரி மாணவி கோபிகா.. அதிர்ந்த மக்கள்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பூங்காவில் உள்ள மரத்தில் கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களும் வெளியாகி உள்ளது.
பெற்றோர் கண்டிப்பதை தாங்காமல், விமர்சனங்களை தாங்கும் பக்குவம் இல்லாமல் 2கே கிட்ஸ் இளைஞர்கள் விபரீதமான முடிவுகளை தேடுகிறார்கள். சிறிய பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களை கூட காட்டாமல் பெற்றோர் வளர்ப்பதால், திடீரென ஏமாற்றமோ, விமர்சனங்களோ வந்தால் தாங்கி கொள்வது இல்லை. அப்படித்தான் செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் ஓசூர் பூங்காவில் உள்ள மரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். என்ன நடந்தது.. யார் என்பதை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகள் கோபிகா. இவருக்கு 19 வயது ஆகிறது. கோபிகா கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்திருக்கிறார். மாணவி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதை கவனித்த பெற்றோர் மகள் கோபிகாவை செல்போனில் பேசிக்கொண்டே இருக்காதே என்று கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவே இல்லை. இதனால் அவரது பெற்றோர், பதறிப்போய் மகளை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் மாணவியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை..
இந்தநிலையில், செவ்வாய்கிழமை அன்று ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் பின்புறமுள்ள பூங்காவில் மாணவி ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் டவுன் போலீசுக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அந்த மாணவி கோபிகா என்பது தெரியவந்ததை அடுத்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஓசூர் பூங்காவில் உள்ள மரத்தில் கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications