தமிழிசை சவுந்தரராஜனை சரஸ்வதியாக மாற்றிய பாஜகவினர்
சென்னை: தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள் வடிவங்களோடு ஒப்பிட்டு பல இடங்களில் பேனர்கள், போஸ்டர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர் புதுக்கோட்டை பாஜகவினர்.
தமிழகத்தில் அரசியல் கட்சித்தலைவர்களை கடவுளர்களோடு ஒப்பிடுவது இன்று நேற்று நடப்பதல்ல... ஜெயலலிதா, குஷ்வுவை கடவுளாக பாவித்து போஸ்டர் ஒட்டி அமர்களப்படுத்துவார்கள்.
இப்போது தமிழக பாஜக தலைவி தமிழிசை சவுந்தரராஜனை சரஸ்வதி, லட்சுமி போல பாவித்து போஸ்டர் ஒட்டி அமர்களப்படுத்தியுள்ளனர்.
யக்கா.. அந்த வீணையில நலந்தானா வாசிச்சி காட்டுங்க.. ப்ளீச்ச்ச்...
Posted by Sudhakar D on Saturday, August 22, 2015
புதுக்கோட்டை மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் பி.பாஸ்கரன் என்பவரின் இல்ல புதுமனை விழாவில் பங்கேற்க வந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தன்னை வரவேற்க ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருந்தார். காரணம் பல இடங்களில் பேனர்கள், வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, "நாம் அனைவரும் இறையருள் பெற்றவர்கள். அதே நேரம் தொண்டர்கள் ஆர்வ கோளாறு காரணமாக கடவுள் படத்தோடு தலைவர்கள் படத்தை இணைத்து போட்டு விடுகிறார்கள். இது தவறான செயல். எந்த தலைவர்களுடனும் கடவுள் படங்களை இணைக்க கூடாது.
நம்மை கையெடுத்து கும்பிடும் அளவுக்கு நாமே கடவுள் படங்களோடு இணைத்து வெளியிடுவது தவறானது. இது போன்ற செயல்களில் ஒரு போதும் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது" என்று அறிவுரை கூறினார் தமிழிசை சவுந்தரராஜன்.