நெல்லையைக் கலக்கும் "புலி நாய்"!
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திறகுள் புலி புகுந்து விட்டதாக பரபரப்பு கிளம்பியதால் பதட்டம் ஏற்பட்டது. ஆனால் அது புலி அல்ல புலி மாதிரி கலர் கொடுக்கப்பட்ட பெரிய நாய் என்று தெரிய வந்துள்ளது.
நெல்லை, பாளை திருமால்நகர் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதோடு, 4 பேரை கடித்து குதறியது. இந்த சம்பவம் பாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் புலியை போன்ற தோற்றத்தில் நாய் ஒன்று நடமாடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கொக்கிர குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவர் அந்த நாயின் உடலில் ஹேர்டை மூலம் புலியை போன்று வரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாய் இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். ஏதோ புலிதான் வந்து விட்டது என்று நினைத்து அங்கிருந்து இடத்தை காலி செய்தனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்த போதுதான் அது நாய் என்றும் அதன் உடலில் புலி போன்று வரைந்துள்ளதும் தெரியவந்தது. பின்னர் அந்த நாய்க்கு உணவு பொருட்கள் கொடுத்தனர். அதன்பிறகு தான் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரததிற்கு மேலாக பரபரப்பாக இருநதது.
இப்படி நாய்க்குப் புலி மாதிரி கலர் கொடுத்து பீதியை ஏற்படுத்துவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மக்கள் கோபத்துடன் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications