மாமா மிட்டாய் வாங்கித் தரேன்.. பணத்துக்காக நண்பனின் குழந்தைகளைக் கொன்ற கொடூரம்.. ஆம்பூரில் அதிர்ச்சி
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே கொடுத்த கடனை திருப்பித் தராமல் இழுத்தடித்ததால் ஆத்திரமடைந்த நபர் காத்திருந்து தனது நண்பனின் இரு குழந்தைகளைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தைகளைக் கொன்ற கட்டட ஒப்பந்ததாரரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் வசித்து வருபவர் யோகராஜ். இவரது நண்பர் வசந்த், கட்டட ஒப்பந்ததாரர். யோகராஜுக்கு தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். கட்டட ஒப்பந்ததாரர் வசந்த், யோகராஜின் குழந்தைகளை வரும்போதெல்லாம் வெளியில் கடைகளுக்கு அழைத்துச் சென்று மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கமாம்.

இதேபோல, கடந்த வியாழக்கிழமை அன்றும் யோகராஜின் வீட்டுக்கு வந்த வசந்த் தர்ஷன் மற்றும் யோகித் இருவரையும் தின்பண்டங்கள் வாங்கித் தருவதற்காக கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், கடைக்குச் சென்ற குழந்தைகள் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதையடுத்து, வசந்தின் செல்போனுக்கு அழைத்துள்ளனர். ஆனால், வசந்தின் செல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே தொடர்ந்து வந்துள்ளது.
இரவு வெகு நேரமாகியும் குழந்தைகளும் வீடு திரும்பவில்லை, வசந்தின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் யோகராஜ் மிகவும் அச்சமடைந்துள்ளார். பின்னர், போலீஸில் புகார் தெரிவிக்கலாம் என்று முடிவெடுத்த யோகராஜ் உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
யோகராஜ் அளித்த புகாரின்பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காணாமல் போன தர்ஷன், யோகித் ஆகிய இரண்டு குழந்தைகளும் வேலூர் மாவட்டம், சிங்கல்பாடியை அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் உள்ள பகுதியில் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்பகுதியில் சடலமாகக் கிடந்த தர்ஷன், யோகித்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து, கொலைக் குற்றவாளியான வசந்த்தை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கட்டட ஒப்பந்ததாரர் வசந்திடம் யோகராஜ் 14 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இதனை வசந்த் திருப்பி கேட்டுள்ளார். அப்போது, அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் யோகராஜ் இழுத்தடித்தும், மறுத்தும் வந்துள்ளார். இதற்கிடையே வசந்துக்கும் அவரது மனைவிக்கும் இந்தக் கடன் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், வசந்தை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
ஒரு பக்கம் நண்பன் பணத்தை திருப்பி தரவில்லை, மறுபுறம் மனைவியும் பிரிந்து சென்றதில் கடும் ஆத்திரத்தில் இருந்த வசந்த் யோகராஜின் இரண்டு மகன்களையும் கடைக்கு அழைத்துச் செல்வது போல் கூட்டிச் சென்று கொலை செய்துள்ளது காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 14 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக நண்பனின் பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications