ஆமாப்பு...2 மூட்டை நிறைய பணம்...நான் பார்த்தேன்” - நாமக்கல்லில் பரவிய புரளியால் பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல் அருகே தேர்தல் விநியோகத்திற்காக 2 சாக்கு மூட்டைகள் ரோட்டோரத்தில் கிடந்ததாக வதந்தி பரவியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் வழங்குவதை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நாமக்கல் அருகே பேளுக்குறிச்சியில் இருந்து வெள்ளாளப்பட்டிக்கு செல்லும் மெயின்ரோட்டில் ஒரு தோட்டம் அருகே சாலையோரத்தில் 2 சாக்கு மூட்டைகள் கிடந்ததாக அந்த வழியாக சென்ற பால்காரர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அங்கு வந்து மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததாகவும், அந்த மூட்டைகளை போலீசார் எடுத்துச்சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த 2 சாக்கு மூட்டைகளிலும் கோடிக்கணக்கில் பணம் இருந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க யாராவது பணத்தை கொண்டு செல்லும்போது, வாகன சோதனைக்கு பயந்து அங்கு போட்டுச் சென்றிருக்கலாம் என்றும், அந்த பணத்தை எடுத்த அதிகாரிகள் மறைக்கிறார்கள் என்றும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தகவல் பரவியது.
அந்த சாக்கு மூட்டையில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியிடப்பட்டதால் இந்த சம்பவம் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை அதிகாரி மகேஸ்வரன் இதுகுறித்து கூறும்போது, "சாக்கு மூட்டையில் பணம் கிடந்ததாக கூறப்படுவது வதந்தி. இந்த தகவலை பரப்பியது யார் என விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்தார்.
நாமக்கல் தேர்தல் அதிகாரியான கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் கேட்டபோது, 2 சாக்கு மூட்டைகளில் பணம் கிடந்ததாக பரவிய தகவலின் அடிப்படையில் போலீசாரும், தேர்தல் அலுவலர்களும் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அதுபோன்ற ஒரு சம்பவமே அங்கு நடக்கவில்லை என்பது தெரியவந்தது. சாக்கு மூட்டைகள் யாருடைய தோட்டத்தில் கிடந்தது என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. எனவே இது வெறும் புரளி. இதுபோன்று யாராவது வீண் புரளியை கிளப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications