கலப்புத் திருமணம் செய்பவர்களை பாதுகாக்க சட்டம் தேவை- ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை
ஈரோடு: தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் ஆலோசனை தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஒருமித்த கருத்துடைய கட்சிகளை இணைத்து இயக்கம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.