ஒரு தலைக் காதல்... காதலித்த பெண்ணுக்கு தீ வைத்து காதலர் தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர், காதலித்த பெண்ணுக்கு தீ வைத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில் (30). தனியார் பேருந்து ஓட்டுநரான செந்தில், விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வலது கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வந்த செந்தில், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தான் வி.பாளையத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தேன். இதையறிந்த அவரது உறவினர்கள் தனது வலது கை, காலை வெட்டி தண்டவாளத்தில் போட்டு விட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
தற்கொலை முயற்சி
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, செந்தில், ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்றபோது அவரது கை, கால் துண்டானது தெரியவந்தது. இதையடுத்து, செந்தில் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழிமறித்துத் தொல்லை
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிக்குச் சென்ற அந்த மாணவியை, செந்தில் வழிமறித்து, தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், செந்திலை போலீஸார் கைது செய்தனர்.
அலறல் சத்தம்
இதனிடையே கால் இழந்த விரக்தியில் இருந்த செந்தில், நேற்று வி.பாளையத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம். இதனிடையே திடீரென இருவரது உடல்களும் தீப்பிடித்து எரிந்த நிலையில், அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இளைஞர் பலி
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். அவர்கள் இருவரும். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு செந்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில், அந்த பெண் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
போலீஸ் தகவல்
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து வீட்டில் அந்தப் பெண் இருந்துள்ளார். அவரது வீட்டுக்கு சென்று அந்த பெண்ணை செந்தில் சந்திக்க முயன்றார். இதனால், அந்த பெண்ணின் பெற்றோர் செந்திலை கண்டித்து அனுப்பியுள்ளனர்.
பெட்ரோல் ஊற்றி வைப்பு
நேற்று வீட்டில் தங்கை, தம்பியுடன் இருந்த அந்த பெண்ணிடம் வந்து செந்தில் மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது செந்தில் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன் மீதும், அந்த பெண் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் செந்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அந்த பெண் ஆபத்தான நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுள்ள விழுப்புரம் தாலுகா போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.