சிவகங்கை அருகே காளை முட்டி பார்வையாளர் பலி... கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் சோகம்
சிவகங்கை அருகே கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை: எம் புதூரில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் கின்னஸ் சாதனை முயற்சியாக இன்று பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக கிரிக்கெட் போட்டிகளுக்கு அமைக்கப்படுவதை போன்று பிரம்மாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 1000 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். சீறிப்பாயும் காளைகளை உற்சாகத்துடன் வீரர்கள் அடக்கி வருகின்றனர். இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டை ஏராளமான மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது காளைகள் சீறிப்பாய்ந்து முட்டியதில் ஜல்லிக்கட்டை காண வந்த ஆலங்குடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற பார்வையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கின்னஸ் சாதனைக்கான ஜல்லிக்கட்டின் போது காளை முட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.