சுங்குவார்சத்திரம் போலீஸ்காரர் அடித்து கொலை.. கத்தி குத்து, காயங்களுடன் சடலம் மீட்பு
போலீஸ்காரர் படு மோசமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீஸ்காரர் உடலில் கத்திகுத்துகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் மோகன்ராஜ். 40 வயதான இவருடைய சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பொய்கை கிராமம் ஆகும். சுங்குவார்சத்திர காவல்நிலையத்தில் பணி என்பதால் அப்பகுதியிலேயே ஒரு அறை எடுத்து தங்கி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வேலையில் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது.
இந்நிலையில் சுங்குவார்சத்திரத்திலுள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் மோகன்ராஜ் சடலமாக கிடப்பதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடைந்த மதுபாட்டிலை கொண்டு கழுத்து பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டு மோகன்ராஜ் பிணமாக கிடப்பதாகவும், உடலிலும் தலையிலும் பல இடங்களில் படுகாயங்கள் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த அவர்கள், மோகன்ராஜ் கொலை குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர். இந்த கொலையை யார் செய்தார்கள் என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? அல்லது மதுபாட்டிலால் கழுத்தில் குத்தப்பட்டிருக்கவே, மதுபோதையினால் ஏற்பட்ட தகராறாக இருக்குமா என்ற கோணங்களில் விசாரணை கையிலெடுக்கப்பட்டுள்ளது.