நாகூர் தர்கா கந்தூரி விழாவில் கூட்டு பிரார்த்தனை செய்த ஏ.ஆர்.ரகுமான்
நாகப்பட்டினம்: நாகூர் தர்கா கந்தூரி விழாவில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சந்தனக்கூடு ஊர்வலம்
நாகை சர் அகமது தெருவில் இருந்து புறப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலத்தில் சாம்பிராணிசட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னுமாக அணிவகுத்து சென்றன.
சந்தனம் பூசும் நிகழ்ச்சி
நாகை நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 5 மணி அளவில் தர்கா அலங்கார வாசலில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சந்தனக்கூட்டில் இருந்து சந்தனக்குடம் தர்காவுக்குள் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டு பிரார்தனை
இந்த நிகழ்ச்சியில் கூட்டுபிரார்த்தனை நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அவர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பிரார்த்தனை செய்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி சேக் ஹசன் சாகிபு தலைமையிலான டிரஸ்டிகள் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைக்குழு உறுப்பினர் செய்யது காமின்சாகிபு, ஆலோசனை குழு தலைவர் செய்யது முகமது கலிபா சாகிபு ஆகியோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications