ஜெ. மரணம்.. விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி பொறுப்பேற்பு
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரிக்கும் விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த விசாரிக்கும் விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.
இந்த ஆணையம் 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
விசாரணை கமிஷன் தலைவராக
இந்நிலையில் விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஆறுமுகசாமி ஆலோசனை வழங்கி வருகிறார்.
தகவல் தெரிவிக்கலாம்
ஓரிரு நாளிலேயே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கவுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விவரம் தெரிந்தவர்கள் நீதிபதியிடம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணங்கள்?
கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு ஜெயலலிதா என்ன காரணங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் இருந்தவர்களிடம் விசாரணை
சேப்பாக்கத்தில் உள்ள தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அருகே நீதிபதி ஆறுமுகசாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனயில் சிகிச்சைப் பெறும் போது அவருடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
சசி குடும்பத்தை விசாரிக்க முடிவு
குறிப்பாக சசிகலா குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்த விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் வரும் காலங்களில் ஜெயலலிதா மரணம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.