நாட்றம்பள்ளியில்.. நள்ளிரவில் வீசிய சூறாவளி.. முறிந்து விழுந்த வேப்ப மரம்.. 6 வயது சிறுமி பரிதாப பலி
நாட்றம்பள்ளியில் மரம் முறிந்து விழுந்து, சிறுமி உயிரிழந்தாள்
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கனமழையின் காரணமாக, மரம் முறிந்து, கூரை வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அசானி புயல் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அந்த வகையில், நேற்றிரவு சென்னையில் மிதமான மழை பெய்தது... அதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது..
அசானி புயல்.. சென்னையில் இன்னும் இரு நாட்களுக்கு மழை.. தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்!
மழை
டெல்டா மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் நல்ல மழை நேற்றில் இருந்து பெய்து வருகிறது... தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவு முதலே பலத்த காற்று வீச ஆரம்பித்துவிட்டது.. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதுமே நல்ல மழை பெய்தது.. ஆம்பூர், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி, வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 10 மணி முதல் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்ட ஆரம்பித்தது...
நாட்றம்பள்ளி
இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய பெய்து கொண்டேஇருந்தது.. இதில், நாட்றம்பள்ளி அருகே கனமழையின் காரணமாக மரம் முறிந்து, கூரை வீட்டின் மீது விழுந்ததில் பெண் குழந்தை பலியான சோகம் நடந்துள்ளது.. நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை பகுதியில் வசித்து வரும் தம்பதி கிருஷ்ணாபாலு - சத்யா.. இவர்களுக்கு 6 வயதில் தேவிகா என்ற மகளும், கவின் என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்றிரவு இவர்கள் 4 பேரும் வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்..
வேப்பமரம்
அப்போது, நள்ளிரவு 2 மணி இருக்கும்.. வீட்டின் அருகே இருந்த வேப்ப மரம் முறிந்து கூரை வீட்டின் மீது திடீரென விழுந்தது.. அந்த சத்தத்தை கேட்டு சுதாரித்துக் கொண்ட சத்யாவும் கிருஷ்ணாபாலுவும் வெளியே ஓடிவந்தனர்.. சத்யா 2வது குழந்தை கவினை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.. ஆனால் மரக்கிளையின் இடுக்கில் கிருஷ்ணாபாலு மாட்டிக் கொண்டார்.. எனினும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.. ஆனால் தேவிகா 6 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.
விசாரணை
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.