தெரு நாய்க்குட்டிகளுக்கு உணவளித்த இளம் பெண் மீது தாக்குதல்... சென்னையில் கணவன், மனைவி அராஜகம்!
சென்னையில் நாய்க்குட்டிகளுக்கு உணவளித்த இளம்பெண்ணை தாக்கிய கணவன்ன மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சூளைமேட்டில் தெரு நாய்க்குட்டிகளுக்கு உணவளித்த இளம் பெண் மீது கணவன் மனைவி தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கணவன் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சவித்ரா. வங்கி ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் வசிக்கும் தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்நிலையில் உணவில்லாம் பசியில் வாடிய நாய்க்கும், அதன்குட்டிகளுக்கும் சவித்ரா கடந்த ஒரு மாதமாக உணவளித்து வந்துள்ளார். புதன் கிழமை இரவு சவித்ரா வழக்கம் போல் உணவளித்துள்ளார்.

நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க எதிர்ப்பு
அப்போது அருகில் வசிக்கும் ஒரு நபரும் அவரது மனைவியும் நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவை வீட்டு வாசலில் போடும் செருப்புகளை தூக்கிச்செல்வதாகவும் கூறியுள்ளனர்.

இளம் பெண் மீது தாக்குதல்
இதற்கு மறுப்பு தெரிவித்த சவித்ரா விலங்குகள் அமைப்பில் கூறினால் அவர்கள் நாய்க்குட்டிகளை தூக்கிச்சென்று விடுவார்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சவித்ராவை சுவற்றில் பிடித்து மோதியுள்ளனர்.

போலீஸில் புகார்
இதில் தலையில் பலத்த காயமடைந்த சவித்ரா சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக நேற்று அவர் போலீஸில் புகார் அளித்தார்.

குடிபோதையில் இருந்த நபர்
இதனடைப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரிக்க சென்றபோது அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்க்குட்டிகளுக்கு உணவளித்ததற்காக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications