மயிலாடுதுறையில் பள்ளியில் மகனை விட்டு விட்டு திரும்பிய பெண்.. திடீரென வந்த லாரி.. நடந்த விபரீதம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மகனை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பியபோது ஸ்கூட்டர் மீது லாரி மோதியது; இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் தலை நசுங்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு 41 வயது ஆகிறது. முத்து ராஜேஸ்வரி தம்பதியின் மகன் சந்தோஷ்க்கு 15 வயது ஆகிறது. சந்தோஷ் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை காலை ராஜேஸ்வரி தனது மகன் சந்தோஷை, பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்திருக்கிறார். மகனை பள்ளியில் பத்திரமாக விட்டு விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி உள்ளார் . மயிலாடுதுறையில் இருந்து சோழம்பேட்டை நோக்கி சென்ற போது திருமண மண்டபம் சாலை வழியாக ராஜேஸ்வரி சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்னைமர சாலையில் அவர் திரும்பியபோது திடீரென அங்கு பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக பின்பக்கமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. .இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜேஸ்வரி துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications