ஆடிக்கிருத்திகை... முருகன் ஆலயங்களில் விழாக்கோலம்... பக்தர்கள் தரிசனம்
சென்னை: ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையென போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி, கந்தகோட்டம் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.
முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக கார்த்திகை நட்சத்திரம் கருதப்படுகிறது. மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமான ஆடிக்கிருத்திகை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினமும் அதற்கு முதல்நாளான ஆடி பரணியையொட்டியும் முருகன் கோவில்களுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வர்.
அரோகரா முழக்கம்
நேற்று பரணியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் மலர்காவடி, வேல் காவடி பன்னீர் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். முருக பக்தர்கள் ‘அரோகரா' என்ற முழக்கத்துடன் காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
வைரக்கிரீடம்
ஆடிக்கிருத்திகை தினமான இன்று முருகப் பெருமானுக்கு வைர கிரீடம், பச்சை கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது, முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையோடு சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதனைக்கான வடமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருத்தணியில் குவிந்துள்ளனர்.
சென்னை முருகன் ஆலயங்கள்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சென்னையில் வடபழனி முருகன் கோவில், கந்தகோட்டம் கந்தசாமி கோவில் குன்றத்தூர் முருகன் கோவில், திருவல்லிக்கேணி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆழ்வார்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் உள்ளிட்ட பல முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வடபழனி முருகன்
வடபழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமான தரிசனம் செய்தனர். இன்று பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 11 மணி வரையில் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்.
புஷ்பக்காவடி
ஏராளமான பக்தர்கள் புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும், ‘‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'', ‘‘வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா'', என பக்தி முழக்கமிட்டு, முருகப்பெருமானுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
ரத்தினகிரி
ஆடிக்கிருத்திகை தினமான இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
வேலூர் அருகே பிரசித்தி பெற்ற ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது..
பாலமதி
இதேபோல் வேலூர் அருகே உள்ள பாலமதி மலையில் உள்ள குழந்தை வேலாயுதபாணி கோவில், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியசாமி கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை இன்று நடக்கிறது. பரணியை முன்னிட்டு நேற்று இந்த கோவில்களுக்கு பக்தர்கள் காவடியை எடுத்து சென்று செலுத்தினர்.இதேபோல் அனைத்து முருகன் கோவில்களும் ஆடி பரணி மற்றும் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.