ஆம் ஆத்மி வேட்பாளர்கள் உதயகுமார், ஜேசுராஜ் 29 ஆம் தேதி மனு தாக்கல்
நெல்லை: ஆம் ஆத்மியில் இணைந்துள்ள கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன்,ஜேசுராஜ் ஆகியோர் வரும் 29-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் கன்னியாகுமரி, தூத்துக்குடி,நெல்லை ஆகிய தொகுதிகளில்போட்டியிடுகிறார்கள்.
இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி மேலிடம் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளது. இதனிடையே 3 பேரும் வருகிற 29ந்தேதி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் இடிந்தகரையை விட்டு வெளியே வர உள்ளனர். சுமார் ஒன்றரை வருடமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்த 3 பேர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. 3 பேரும் இடிந்தகரையை விட்டு வெளியே வராமல் போராட்ட களத்தில் இருந்தனர்.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி கூட்டம் நெல்லையில் நடந்தபோது உதயகுமாரும், ஜேசுராஜும் வீடியோ கான்பரன்ஸ் மூலமே பேசினார்கள். இந்த நிலையில் 29 ந் தேதி அவர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போலீசார் உதயகுமார், ஜேசுராஜ், புஷ்பராயனை கைது செய்ய தீவிரம் காட்டமாட்டார்கள் என தெரிகிறது.
இதனால் 3 பேரும் இடிந்தகரையை விட்டு வெளியே வந்து மனு தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று ஆம்ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.