ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரனுக்கு 15 நாள் சிறை.. சேலம் சிறையில் அடைப்பு
ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரனை 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து கூறியதற்காக கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாழப்பாடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வசீகரன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், விவசாய நிலங்களை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ஊடகங்களிலும் பசுமைச் சாலைக்கு கண்டனம் தெரிவித்து பேசி வருகிறார்.
சமூக வலை தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். பசுமை வழிச்சாலை அமைத்தால் 16 பேரை வெட்டுவேன் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். வசீகரனின் இந்த பதிவு குறித்து சேலம் மாவட்ட குள்ளம்பட்டி கிராம நிர்வாக அலுவலர், லிங்கேஸ்வரன் காரியாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இன்று காலை 5.30 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சியில் மாநில தலைவர் வசீகரன் அவரது மதுரவாயலில் வீட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உட்பட 6 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டது.
சென்னையில் கைது செய்யப்பட்ட வசீகரனை போலீசார் சேலம் அழைத்து சென்றனர். இன்று பிற்பகல் அவரை வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, வசீகரன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications