ஓ.பி.எஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி எம்எல்ஏ!
ஓபிஎஸ் அணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அதில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சேலம்: ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஆறுக்குட்டி எம்எல்ஏ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவரது அணியில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதன் விளைவாக அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. அப்போது சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தனியாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தனியாக பிரிந்து சென்ற ஓபிஎஸ்ஸுக்கு முதல் ஆளாக போய் ஆதரவு தெரிவித்தவர் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணி சார்பில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அந்த அணியில் தான் ஓரங்கட்டப்படுவதாகவும் வெளிப்படையாக ஆறுக்குட்டி புகார் தெரிவித்தார்.
அவர் அணிமாறுவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் சேலம் எடப்பாடியில் உள்ள முதல்வர் பழனிச்சாமியை இன்று சந்தித்து அவரது அணியில் இணைந்து கொண்டார். இதனால் எடப்பாடி அணிக்கு பலம் கிடைத்துள்ளது.