திருச்சி சிவாவையும் சசிகலா புஷ்பாவையும் இணைத்து அநாகரீகமாக பேசிய ஆவடி குமார்
ராஜ்ய சபா எம்பிக்களான திருச்சி சிவாவையும், சசிகலா புஷ்பாவையும் சேர்த்து தொலைக்காட்சியில் ஆவடி குமார் அநாகரீகமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ராஜ்ய சபா எம்பிக்களான திமுகவின் திருச்சி சிவாவையும் அதிமுகவின் சசிகலா புஷ்பாவையும் சேர்த்து அதிமுக பிரமுகர் ஆவடி குமார் டிவியில் அநாகரீகமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜனுக்கும் மோதல் நிலவி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதா ஒருபோதும் சசிகலா நடராஜனை அரசியலில் ஈடுபடுத்த நினைத்ததில்லை எனக்கூறினார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற உரிமையில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். இதனால் சசிகலா நடராஜனுக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் இடையேயான மோதல் முற்றியது.
இந்நிலையில் சசிகலாபுஷ்பா சார்பில் அவரது கணவர் லிங்கேஸ்வரன், வக்கீல் ஒருவருடன் பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்தனர். அவர்களை சசிகலா நடராஜன் தரப்பினர் சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் திமுக எம்பி திருச்சி சிவாவையும், சசிகலா புஷ்பாவையும் சேர்த்து தரக்குறைவாக பேசினர். தவறான வார்த்தைகளாலும் திட்டினர்.
இந்த தகராறை நேரலை செய்த டிவி சேனல் ஒன்று இந்த அடிதடி தொடர்பாக அதிமுக பிரமுகர் ஆவடி குமாரிடம் தொலைபேசியில் கருத்துக் கேட்டனர். அப்போது ஆவடி குமார் கொஞ்சமும் பொது நாகரீகமின்றி சசிகலா புஷ்பாவை ஒரு பெண் எம்பி என்றும் பாராமல், அவரது கணவர் திருச்சி சிவாவா என கேட்டு அநாகரீகமாக பேசினார். தொலைக்காட்சியில் சசிகலா புஷ்பாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து ஆவடி குமார் பேசியது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திருச்சி சிவா-சசிகலா புஷ்பா சேர்ந்திருக்கும் படங்களை வெளியிடக் கூடாது என கோர்ட் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் பொது இடத்தில் இருவரையும் இணைத்துப் பேசியதை வைத்து ஆவடி குமார் மீது சசிகலா புஷ்பா வழக்குதொடருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.