ஆவின் பூத்துகளில் இன்று முதல் "மெஷினில்" பால் வராது!
சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் பூத்துகளில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் பால் விற்பனை இன்று முதல் நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் ஆவின் நிர்வாகத்துக்குச் சொந்தமாக 215 தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்த நிலையங்களுக்கு பால் வண்டிகளில் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
30 ஆயிரம் லிட்டர் விற்பனை:
இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் ஆவின் பால் டேங்கர்களில் நடைபெற்ற கலப்படம் கண்டறியப்பட்டது.
பால் கலப்படம்:
அதையடுத்து, ஆவின் நிர்வாகம் பால் கலப்படம் நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தானியங்கி இயந்திரங்கள்:
அந்த வரிசையில் ஆவின் பூத்துகளில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் சில்லறையாக வழங்கப்படும் பால் விற்பனையை நிறுத்தும் முடிவை ஆவின் நிர்வாகம் எடுத்தது.
விற்பனை நிறுத்தம்:
அதன்படி வியாழக்கிழமை முதல் தானியங்கி இயந்திரத்தில் பால் விற்பனை நிறுத்தப்படுகிறது என ஆவின் நிர்வாகம் அறிவித்தது.
781 விற்பனை நிலையங்கள்:
இதுகுறித்து ஆவின் நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, "சென்னை, புறநகர் பகுதிகளில் 781 பால் விற்பனை நிலையங்கள், 93 பாலகங்கள், தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், மாதாந்திர பால் அட்டைகள் ஆகியவற்றின் வாயிலாக ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.
பால் வண்டிகளில் விநியோகம்:
நாள் ஒன்றுக்கு சராசரியாக 11.28 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இவற்றில் தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், ஒரு சில தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, பால் வண்டிகளில் ஆவின் நிர்வாகம் பாலை விநியோகம் செய்து வந்தது.
கலப்படத்தால் நிறுத்தம்:
கலப்படம் தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, தானியங்கி இயந்திரம் மூலம் சில்லறையாக வழங்கப்படும் பால் விற்பனை முற்றிலும் நிறுத்தம் செய்யப்படுகிறது.