அமைச்சரை மாற்றியும்.. ஆவினில் தொடரும் பிரச்சினை.. சென்னையில் இன்று பால் பாக்கெட்டுகள் தாமதம்
சென்னை: ஆவின் பால் பண்ணைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் வருகை குறைந்ததால் இன்றைய தினம் பால் பாக்கெட்டுகள் தாமதமாக வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, பால் கொள்முதல் குறைவு காரணமாக பால் வினியோகம் செய்வதில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், அம்பத்தூர், காக்களூர் ஆவின் பால் பண்ணைகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவாக உள்ளனராம்.

அது போல் பால் பாக்கெட்டுகள் வைக்கப்படும் பிளாஸ்டிக் டப்புகளும் பற்றாக்குறையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இன்று காலை 6:40 மணி நிலவரப்படி ஒவ்வொரு பால் பண்ணையிலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் ஏற்றப்படவில்லை. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. பால் முகவர்கள் கடும் அவதியுற்றனர்.
சில இடங்களில் பால் போடும் நபர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். சில இடங்களில் பால் பாக்கெட்டுகள் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகே வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆவின் பால் பிரச்சினையில் ஏற்கெனவே நாசர் அமைச்சராக இருந்த போது சில அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்படியிருக்கும் பட்சத்தில் தற்போது நிர்வாக காரணத்திற்காக அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்ற நிலையிலும் ஆவின் பால் விவகாரத்தில் பிரச்சினை எழுந்துள்ளது.

சில இடங்களில் கெட்டு போன பால்பாக்கெட்டுகள் வந்ததாகவும் கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்தது. அது போல் பால் விநியோகிக்கும் இயந்திரங்களில் கோளாறு காரணமாகவும் பால் விற்பனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications