அரசு சின்னமான ஆயி மண்டபத்தை தரைமட்டமாக்குவோம்... வாட்ஸ்அப் மிரட்டலால் புதுவையில் பரபரப்பு
புதுவை அரசு சின்னமான ஆயி மண்டபத்தை தரைமட்டமாக்குவோம் என்று வாட்ஸ்அப்பில் மிரட்டல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
புதுச்சேரி: புதுவையின் அரசு சின்னமாக பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தை இடித்து தரை மட்டமாக்குவோம் என்று மிரட்டல் வெளியாகியுள்ளது.
புதுவைச்சேரியில் வாட்ஸ்அப் போராளிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. சமூக நலம் சார்ந்த போராட்டங்களை இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குழுவில் உள்ளவர்களால் ஆடியோ ஒன்று வெளியாகி அது வைரலாக பரவி வருகிறது.
மிரட்டல் ஆடியோ
இரண்டு நிமிடம் 13 நொடிகள் ஓடும் இந்த ஆடியோவில் புதுவையின் அரசு சின்னமான ஆயி மண்டபத்தை தரைமட்டமாக இடித்து நொறுக்க வேண்டும்; அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று அந்த ஆடியோவில் ஒலிக்கும் குரல் கோரியுள்ளது.
இடிப்போம்!
மேலும், அந்த ஆடியோவில், புதுவையில் உள்ள ஆயி மண்டபத்தை இடிக்கும் கடமை நமக்கு உள்ளது. அந்த மண்டபத்தை இடித்துவிட்டு வேறு ஒரு நினைவு சின்னத்தை உருவாக்க வேண்டும் நாம் போராட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நொறுக்குவோம்
ஆயி மண்டபம் என்பது விபசார மண்டபம். எனவே, புதுவைக்கு நற்பெயர் கிடைக்க ஆயி மண்டபத்தை தரைமட்டமாக இடித்து நொறுக்குவோம் என்றும் அந்த ஆடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசு சின்னம்
ஆயி மண்டபத்தின் சின்னம் தான் அரசு சின்னமாக புதுவை அரசால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் மாற்றி அமைக்க நாம் போராட வேண்டும். இந்த மண்டபத்தை மாற்றி புதுமையாக ஒரு அழகு சிற்பத்தை உருவாக்குவோம் என்று அந்த ஆடியோ தெரிவித்துள்ளது.
அழைப்பு
மேலும், போராளி குழு தோழர்கள், இளைஞர்கள், சமூக அமைப்பு போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கருத்தை முன்னிறுத்தி செயல்படுவோம் என்றும் வாட்ஸ் அப் குரல் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.