இளைஞர்களை கனவு காணச் சொன்ன கலாமின் நிறைவேறாத கடைசி ஆசை
சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாள் இன்று. இளைஞர்களை கனவு காணுமாறு வலியுறுத்திய அவரின் கடைசி ஆசை நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பேக்கரும்பு பகுதியில் அவரது நினைவிடத்திற்கான அடிக்கல் இன்று காலை 9 மணிக்கு நாட்டப்படுகிறது.
இந்நிலையில் கனவு காணச் சொன்ன கலாமின் நிறைவேறாத கடைசி ஆசை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது குறித்து கலாமின் உதவியாளர்களில் ஒருவரான ஸ்ரீஜன்பால் சிங், "நான் என்ன தர முடியும்?: எனது ஆசிரியர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் வாழ்க்கை பாடங்களில் இருந்து" (வாட் கேன் ஐ கிவ்?: லைப் லெசன்ஸ் பிரம் மை டீச்சர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்) என்ற புத்தகத்தில் கூறியிருப்பதாவது,

அண்ணன் மரைக்காயர்
2015-ம் ஆண்டு மே மாதம். அது ஒரு சிறப்பான தருணம். அப்துல்கலாமின் மூத்த சகோதரர் ஏ.பி.ஜே. மரைக்காயருக்கு, இன்னும் சில மாதங்களில் 99 வயது ஆகப்போகிறது. அப்போது கலாம் என்னிடம் (ஸ்ரீஜன்பால் சிங்) தோழரே நான் சொல்வதை கவனியுங்கள். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி எனது சகோதரருக்கு 99 வயது ஆகப் போகிறது. அப்படியென்றால் இந்த ஆண்டின் இறுதியில் அவர் எத்தனை முறை தனது வாழ்நாளில் சூரியனைச் சுற்றி வந்து இருப்பார்?...

சூரியனை சுற்றி
அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாடும் அனைவரிடமும் இந்த கேள்வியை கேட்பது வழக்கம். அவர் ஒரு ராக்கெட் என்ஜினீயர் என்பதால் இதுபோல் பூமி சூரியனைச் சுற்றி வரும் கணக்கு குறித்து இயல்பாக கேட்பார். அவருடைய இந்த கேள்வி எனக்கு பரிச்சயமானது என்பதால், நான் நூறு முறை சுற்றி இருப்பார் என்றேன்.

100வது பிறந்தநாள்
பின்னர் அவர் என்னிடம், அடுத்த ஆண்டு(2016) நவம்பர் மாதம் 5-ம் தேதி எனது சகோதரரின் 100-வது பிறந்தநாள். அவர் எப்போதும் தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடியது கிடையாது. அவருடைய 100-வது பிறந்தநாளில் அவருக்கு நான் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மிகப்பெரிய விருந்தை அளிக்க வேண்டும். அதை அவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், சரியா? என்று என்னிடம் கூறினார். இந்த விருந்தை தனது சொந்த ஊரில் அளிக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார்.

விருந்து
அன்று எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைவோம். பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகள் என எல்லோரும் இருப்பார்கள். மொத்தம் 50 பேர் வரை இருப்பார்கள் என்றும் கலாம் என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு என்வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தனது சகோதரருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்பது பற்றி கலாம் முடிவு செய்திருக்கவில்லை.

100 நூலகங்கள்
அடுத்த அரைமணி நேரம் நாங்கள் இருவரும் விருந்து நிகழ்ச்சி பற்றி திட்டமிட்டோம். 100-வது பிறந்தநாள் வாழ்த்துகள் என பதாகை வைப்பது முதல் விருந்து நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை இசைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும் சிந்தித்தோம். முடிவில் இந்திய கிராம பகுதிகளில் 100 நூலகங்களை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

கலாம் மகிழ்ச்சி
100 வயது வாழ்ந்தவருக்கு 100 நூலகங்கள்... இந்த யோசனையால் அப்துல்கலாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இதற்கான நடவடிக்கைகளை ஜூலை மாதம்(2015) தொடங்குவது என முடிவு செய்தோம். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நூலகங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த புத்தகம் உங்களை அடையும் நேரத்தில் நாடு முழுவதும் கிராமங்களில் 100 நூலகங்களை தொடங்குவது என்ற இலக்கை நாங்கள் எட்டி இருப்போம்.

புத்தகம்
இந்த புத்தகத்தை நீங்கள் வாசிப்பதன் மூலம் அப்துல்கலாமின் இந்த திட்டத்தில் உங்களுடைய ஒரு பங்கும் இருக்கும். ஏனென்றால் இந்த புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் தொகை இன்னும் இதுபோல ஏராளமான நூலகங்களை நாட்டில் அமைக்க உதவியாக இருக்கும் என்று சிங் தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

மறைவு
அப்துல் கலாம் தனது சகோதரரின் 100வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முன்பே இறந்துவிட்டார். அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமலேயே அவர் இந்த உலகை விட்டு சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications