நெல்லை நான்கு வழி சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து
நெல்லையில் நான்கு வழி சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
நெல்லை: நெல்லை அருகே அடுத்தடுத்து இரு ஆம்னி பேருந்துகள் கவிழ்ந்ததால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெளியூரில் பணி செய்பவர்கள், கல்லூரி, பள்ளிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது போல் தனியார் பஸ்களும் நெடுந்தூரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு தனியார் பேருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு நெல்லைக்கு வந்தது.
இந்த பேரூந்து கங்கைகொண்டான் நான்குவழிசாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த சென்டர் மீடியனில் ஏறியது. சுதாரித்த டிரைவர் பிரேக்கை போடுவதற்குள் பஸ் கவிழ்ந்தது.
அதிகாலை என்பதால் நீண்ட உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறல் சத்தம் எழுப்பினர். உடனடியாக நெடுஞ்சாலை மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பயணிகள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த தனியார் பேருந்தும் விபத்து நடந்த இடத்தின் அருகே திடீரென கவிழ்ந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த 7 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால் சாலை ஈரமாக இருந்தது. இரு பஸ்களும் திடீரென பிரேக் பிடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தால் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.












Click it and Unblock the Notifications