உதகையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
நீலகிரி – கோத்தகிரி அருகில் சுற்றுலா வேன் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை: நீலகிரி மாவட்டம் உதகைக்கு வேலூரிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வந்துள்ளனர்.
உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்த பிறகு ஊர் திரும்ப திட்டமிட்டு உதகையிலிருந்து கோத்தகிரி வழியாக மலைப்பாதையில் மேட்டுப்பாளையம் நோக்கி அவர்களது வேனில் சென்றுள்ளனர்.
கீழ் தட்டப்பள்ளம் என்னும் இடம் அருகே சென்று கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்தவர்களில் சிலர் 100 அடி பள்ளத்தில் தூக்கி எரியப்பட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டு பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 20 க்கும் மேற்பட்டோர் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்த பின்னர் படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக உதகை மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சங்கர் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
இந்த விபத்து குறித்து கோத்தகிரி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.