சென்ட்ரல் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்- ஏர்போர்ட்டில் நாராயணசாமி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து தனது தொகுதியான புதுச்சேரிக்கு வரும்போதெல்லாம் சென்னை ஏர்போர்ட்டில் நிருபர்களுக்கு ஏதாவது ஒரு பேட்டி கொடுப்பது வழக்கம். பெரும்பாலும் அது நீண்ட கால பிரச்னைகள், சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதாகத்தான் இருக்கும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அடுத்த வாரத்தில் அல்லது அடுத்த 15 நாட்களுக்குள் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும் என்று கூறிவந்தார்.
இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் இன்று அவர் சென்னை விமான நிலையத்தி்ல நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்;
தமிழக அரசும், உள்துறை அமைச்சகமும் இணைந்து குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே உரசல் இருப்பதாக கூறி பிரச்னையை யாரும் உருவாக்க வேண்டாம். குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்துகிறது.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த உடன் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். எங்கப்பா நாராயணசாமியை இன்னும் காணோமே என்று பார்த்தோம் என்று நிருபர்கள் பேசிக்கொண்டனர்.