அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மீது மர்மநபர்கள் ஆசிட்முட்டை வீச்சு
சென்னை: சென்னை அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் கார் மீது ஆசிட் முட்டை வீசப்பட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் மக்களவை முன்னாள் உறுப்பினர் ஆரூண் மகன் அசன் மவுலானா போட்டியிடுகிறார். இந்நிலையில் வாவின் பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, அத்திப்பட்டு செல்வதற்காக கட்சியினருடன் தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அம்பத்தூர் இரட்டை மேம்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, மேம்பாலத்திலிருந்து மர்மநபர்கள் சிலர் ஆசிட் கலந்த முட்டையை அசனின் காரின் மீது வீசினராம். இதையடுத்து கார் ஓட்டுநர் காரை நிறுத்தி கதவை திறந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட ஆசிட் நெடியால், அசன் மவுலானா மற்றும் காரில் இருந்தவர்கள் மயக்கமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.