செங்கோட்டையில் சாலையில் ஆறாக ஓடிய ஆசிட்
செங்கோட்டை: செங்கோட்டையில் இன்று லாரியிலிருந்து ஆசிட் கசிந்து சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு இன்று ஹைட்ரோ குளோரின் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஆறுமுகநேரியைச் சேர்ந்த சங்கர் என்பவர் லாரியை ஓட்டினார்.
செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே வரும்போது லாரியின் இரண்டு பகுதிகளில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிட் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உடனடியாக டிரைவருக்கு தெரியபடுத்த அவர் உடனடியாக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தினார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விரைந்து வந்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் லாரியில் இருந்து கொட்டிய "ஹைட்ரோ குளோரின்" ஆசிட் அருகில் மக்கள் பயன்படுத்தும் நீர் ஓடையில் கலந்து வருவதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் தென்காசி கோட்டாட்சியர் வெங்கடேஷ், துணைக் கண்காணிப்பாளர் சசாங் சாய் தலைமையில் போலீசாரும், வருவாய்த் துறையினரும் ஈடுப்பட்டுள்ளனர்.