ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: அக்னி பரீட்சை உண்மையிலேயே மு.க.ஸ்டாலினுக்குதான்!
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் அதிமுகவுக்கு ஆசிட் டெஸ்ட் என்றாலும் கூட உண்மையில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினுக்குதான் இது அக்னி பரீட்சை.
திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் செயல் தலைவராகி இருக்கிறார் மு.க. ஸ்டாலின். திமுகவைப் போல மற்றொரு மாபெரும் இயக்கமாக இருந்தது அதிமுக.
ஆனால் ஜெயலலிதா எனும் ஆளுமை மறைந்த நிலையில் அதிமுக சிதறு தேங்காயாகிவிட்டது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களில் பெரும்பான்மையோர் ஓபிஎஸ் அணியில் உள்ளனர். 122 எம்.எல்.ஏக்கள் மட்டும் சசிகலா அணியில் உள்ளனர்.
சிதறு தேங்காய்
இவர்கள் மட்டுமின்றி தீபா, இனியன் சம்பத் என ஆளுக்கு ஒரு திசையில் தனி ஆவர்த்தனம் வாசித்து வருகின்றனர். அதிமுக தொண்டர்களில் பலர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அந்த கட்சிக்கே முழுக்கு போட்டுவிட்டனர்.
ஆர்கே நகர் தேர்தல்
திமுகவுக்கு சரிக்கு சமமான அதிமுக இப்போதைக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை டவுட்
திமுக நிச்சயம் இந்த தேர்தல் களத்தில் இறங்கும். அதிமுகவோ 3 பிரிவுகளாக களத்தில் நிற்கும். ஒன்றுபட்ட அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் இரட்டை இலை சின்னம் ஆர்.கே.நகர் தொகுதியில் வலம் வருமா என்பது உறுதியாக தெரியவில்லை.
திமுக நிலைமை
இப்படி எதிரிகள் சிதறி இருக்கும் ஒரு தேர்தல் களத்தில் திமுக வெல்வது கடினம் இல்லைதான். ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் தொடர்ச்சியான செயல்பாடுகளில் ஒரு மிதமிஞ்சிய நம்பிக்கை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
பகல் கனவு கூடாது
எதிரியே இல்லையே.. படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்பது போன்ற பகல் கனவு காணும் அளவுக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது; ஆனால் எதிரே நிற்பவர்கள் பணபலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற கோஷ்டி. அதை புரிந்து கொண்டே உஷாராக இல்லாமல், வழக்கம்போல தோற்றுவிட்டு பண பலம் வென்றது பல்லவி பாடினால் திமுக தொண்டர்களே அந்த வாதத்தை ஏற்க மாட்டார்கள்.
அக்னி பரீட்சையே
மிகப் பெரிய ஊழல்கட்சியாக மக்கள் முன்பு கூனிக் குறுகி நிற்கும் அதிமுகவை வெல்வது மட்டுமல்லாமல், மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வென்றால் மட்டுமே அக்கட்சிக்கு பெருமையாக இருக்க முடியும். ஆக உண்மையில் ஆர்.கே.நகர் தேர்தல் களம் என்பது திமுகவின் செயல் தலைவராகியிருக்கும் மு.க.ஸ்டாலினுக்குதான் அக்னி பரீட்சை என்பதில் சந்தேகமே இல்லை!