ஒண்டிக்கு ஒண்டி வர்றீங்களா, ஒரே மேடையில பேசலாம்- மோடியை அழைத்த 'தொப்பி' கார்த்திக்!
சென்னை: தன்னுடன் ஒரே மேடையில் மோடி விவாதம் செய்யத் தயாரா என்று நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளும் மக்கள் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக் சமீபத்தில் ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து தென்சென்னை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.வி.ரமணியை ஆதரித்து மயிலாப்பூரில் பிரசாரம் செய்து வரும் கார்த்திக் பேசியதாவது.

இதயங்களை சேகரிக்கிறேன்
மயிலாப்பூரில் நான் வாக்கு சேகரிக்க வரவில்லை. இதயங்களை சேகரிக்க வந்துள்ளேன். என்னை நிறைய பேர் காக்க வைத்ததும், ஏமாற்றியதும் ஊருக்கு தெரிந்த கதை.

என்னா மரியாதை... என்னா மரியாதை
சோனியாவை சந்தித்து இரண்டரை மணி நேரம் பேசினேன். எந்த தொகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கங்கன்னு சொன்னார். நான் தொகுதியே வேண்டாம்னு சொன்ன உடனே என்னை மரியாதையோட பார்த்தனர்.

பாஜக ஆட்சி தேவையா
மதத்தால் நம்மை பிரிக்கக் கூடிய பாஜக ஆட்சி நமக்கு தேவையா? மதத்திற்கு மதம் பிடித்தால் நாடு தாங்காது. தமிழர்களை ஏமாற்ற முடியாது.

மோடி தாடி நரைச்சிருச்சு
மோடி எல்லாரையும் திட்டி திட்டி அவரோட தாடி நரைச்சு போச்சு. நான் யாரையும் திட்றதில்லை. அதனாலதான் எனக்கு இன்னும் நரைக்கலை... (துண்டை இழுத்து அட்ஜஸ்ட் செய்வதிலேயே பாதி நேரம் போய்விட்டது)

எல்லோரும் புத்திசாலிகள்
வெல்... மத்தவங்களைப் போல செய்வீங்களா?... செய்வீங்களான்னு நான் கேட்கமாட்டேன். எனக்கு தெரியும் நீங்க காங்கிரஸ் வேட்பாளருக்கு செய்வீங்க. ஏன்னா மயிலாப்பூர்ல இருக்கிறவங்க புத்திசாலிங்க. நானும் மயிலாப்பூர்லதானே பிறந்தேன் என்றார்.

அலுத்து போன வேட்பாளர்
கார்த்திக் ஆடி ஆடி பேசியதில் ஜீப்பில் இருந்த வேட்பாளர் ரமணிதான் அலுத்து போய்விட்டார். அவருக்கும் கார்த்திக் துண்டை எடுத்துக் கொடுப்பதிலேயே நேரம் சரியாக இருந்தது. அப்புறம் எப்படி கும்பிடு போடுறது?

இந்த கண்ணாடி வேற
காலையில் துண்டு போட்டு பிரசாரம் செய்த கார்த்திக் மாலையில் திருவல்லிக்கேனியில் பிரசாரம் செய்த போது தொப்பி, கண்ணாடி அணிந்து பிரசாரம் செய்தார். அது அவரை பேச விடாமல் நழுவிக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் கண்ணாடி கழற்றி கீழே வைத்த பின்னர்தான் அவரால் பேச முடிந்தது.

நல்லவங்க இருக்காங்க.
காங்கிரஸ் கட்சியில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். எனவேதான் அந்த கட்சிக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இது தெரிந்து இருந்தும் காங்கிரஸ் கட்சி அந்த சட்டத்தை நிறைவேற்றியது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி
தேசப்பற்று மிக்கவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள். சுதந்திரம் வாங்கி தந்த கட்சி காங்கிரஸ். எனவே நாட்டை காங்கிரஸ் கட்சிதான் ஆள வேண்டும்.
பாரதிய ஜனதா ஆட்சியில் இந்தியா ஒளிர்கிறது என்றார்கள். ஆனால் எங்கும் ஒளி வீசவில்லை. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய எஸ்.வி. ரமணிக்கு கை சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்றார் போகிற போக்கில்.












Click it and Unblock the Notifications