மது போதையில் கார் ஓட்டிய மனோஜ் மீது வழக்கு.. பிஎம்டபிள்யூ சொகுசு கார் பறிமுதல்
Recommended Video
சென்னை: இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் மீது குடி போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரின் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ், தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நுங்கம்பாக்கம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஸ்டெர்லிங் ரோட்டில் மனோஜ் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மனோஜ்குமார் வாகனத்தை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.
இதில் அவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்துவது குறைவு. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற அமைப்பை நிறுவி, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுத்து வருகிறார். இதில் பல கலைஞர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஐபிஎல் போட்டித் தொடரின்போது, சென்னையில் இருந்து வேறு நகரத்திற்கு போட்டிகளை மாற்ற வேண்டும் என்று நடந்த பிரமாண்ட போராட்டத்தின்போது பாரதிராஜா மற்றும் அவர் அமைப்பும் பங்கேற்றது. இந்த நிலையில், மனோஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.