இத்தனை எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கலைன்னா எப்படி.. காய்ச்சி எடுக்கும் மன்சூரலிகான்
தெருநாய்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் மன்சூரலிகான் மோடிக்கு எதிராக பேசியுள்ளார்.
சென்னை: மன்சூரலிகான் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். அவரது எந்த பேச்சை எடுத்துக்கொண்டாலும் அங்கே பல பஞ்ச்-கள் கிடைக்கும். குறிப்பாக அரசியல் குறித்த பேச்சு என்றாலே சரவெடிதான். வன்முறைக்கு எதிராக பொதுமக்களிடம் பேசி சிறைக்கு செல்பவர்களில் மிக முக்கியமானவரும், முதன்மையானவரும் மன்சூர்தான்.
அப்படித்தான் தெருநாய்கள் என்ற ஆடியோ வெளியீட்டு விழாவிலும் பேசியிருக்கிறார். இவர் பேசுவதற்கு ஏற்ற மாதிரியே கதையும் உள்ளதுதான் இதன் ஹைலைட்டே. மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதுபோல் கதையாம். சொல்லவே வேணாம். இதில் மத்திய அரசை உண்டு இல்லை என்று தன் பேச்சிலேயே காய்ச்சி எடுத்து விட்டார்.
மன்சூரலிகான் பேச்சிலிருந்து சில துளிகள்:
"பணமதிப்பிழப்பு கொண்டு வர்றதுக்கு முன்னாடி தென்னிந்திய சினிமாவே நல்லாதான் இருந்தது. ஆனால் அந்த சட்டம் வந்ததுக்கு அப்பறம் 500 சிறுபட ப்ரொட்யூசர்களே காணோம். அதேபோல எந்த மிருகத்தையும் வச்சு படம் எடுக்க கூடாதுன்னு விலங்குகள் நல வாரியம் அமைப்பு தடை பண்ணிட்டு இருக்கு. இந்த திட்டத்தினால் எந்த பணக்காரனாவது கஷ்டப்பட்டானா? கிடையவே கிடையாது.
எதுக்காக 8 வழிச்சாலை?
இந்த 8 வழிச்சாலையை யாரு கேட்டா? இப்போ என்ன அவசியம் வந்துடுச்சி? யாருக்கெல்லாம் இதனால பயன்னு அரசு தெளிவா சொல்லணுமா வேணாமா? 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக இந்த சாலையை போடறதா?
தாய்ப்பாலும் விற்பார்கள்
இப்படித்தான் சிறுவாணி தண்ணிய தனியாருக்கு விக்குது, காத்தையும் விற்க போகுது. அவ்வளவு எதுக்கு, தாய்ப்பாலை கூட மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தரப்போறாங்க. பார்த்துட்டே இருங்க, தமிழன் முழிச்சிட்டிருக்கும்போதே அவன் பேண்ட்டையும் அவிழ்க்க பாக்கறாங்க. ஏன் இப்படி?
ஏன் வாய் திறக்கலை?
தமிழன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா? திருவள்ளுவர் சொன்ன மாதிரி, நம் நாட்டை வளமாக்கி நமக்கே பயன்படுத்திக்க தெரியாதா என்ன? எதிர்க்கட்சிக்காரங்க ஏன் அமைதியா இருக்காங்க? இவ்வளவு எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கலேன்னா எப்படி? அதுக்கும் காரணம் கமிஷன்தானா?
நாடு நாசம் ஆககூடாது
அன்னைக்கு காந்தி, காமராஜர் எல்லாம் பிரிட்டிஷ்காரனை ஓட ஓட விட்டார்கள். ஆனா இன்னைக்கு இவங்க, ஜப்பான், கொரியா காரனை கூவி கூவி கூப்பிடுறாங்க. விரைவில் எல்லா தமிழர்களும் ஒன்று சேர்ந்து தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம். நாடு நாசம் ஆவதை தடுக்க வேண்டும். " என்று பேசினார் மன்சூரலிகான்.