என்னை பார்க்க வராதீங்க... நானே உங்களை தேடி வருவேன் - ராகவா லாரன்ஸ்
லாரன்ஸின் வெளியூர் ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியான நிலையில், சென்னையில் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என லாரன்ஸ் உத்தரவிட்டுள்ளார்
சென்னை: நடிகர் ராகவேந்திரா லாரன்ஸின் ரசிகர் ஒருவர் அவரை பார்க்க வந்து விபத்தில் பலியானதால், ரசிகர்கள் யாரும் தன்னை சந்திக்க சென்னை வரவேண்டாம் என லாரன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் அரசியல் பிரவேச முடிவை தொடர்ந்து தானும் அரசியிலில் விரைவில் ஈடுபடுவேன் என்று கருத்தை அவர் தெரிவித்தார். மேலும் ரஜினியின் பிறந்தநாள் விழாவை தனது ரசிகர்களுடன் கொண்டாடிய லாரன்ஸ் விரைவில் அவர்களுக்கும் கட்சி பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த விழாவில் பேசிய அவர் தமிழகத்தை ரஜினிகாந்த் சரியான பாதையில் கொண்டு செல்வார் என்றும், அவருக்கு உறுதுணையாக தானும் தன்னுடைய ரசிகர்களும் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் தினமும் லாரன்ஸை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.
கடலூரைச் சேர்ந்த ரசிகர்கள் ஒருவர் ராகவேந்திரா லாரன்ஸை சந்திக்க சென்னை வரும் வழியில் இன்று விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தன்னை சந்திக்க யாரும் சென்னை வரவேண்டாம் என லாரன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக தானே வந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் அவர் வழியையே பின்பற்றி அரசியலில் கால் பதிக்க நினைக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.