இதோ...அதோ.. எந்திரன் 2-க்காக தொடரும் இழுத்தடிப்பு.. 15-ந் தேதி ரசிகர்களை சந்திக்கிறாராம் ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த் வரும் 15ம் தேதி முதல் மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ரசிகர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடங்கவுள்ளது என்றும் அதற்கு முன்னோட்டமாக வரும் 15ம் தேதி முதல் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் புதியதாக நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் எந்திரன் 2. இயக்குனர் ஷங்கரின் உருவாக்கத்தில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதன் வெளியீடும் விரைவில் நடக்கவுள்ளது இந்த நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அவர் நடிப்பில் வெளியான அனிமேஷன் படமான கோச்சடையான் பெரிய அளவுக்கு பொருள் இழப்பை கொடுத்திருந்தது. இதனால் அவரின் சில சொத்துக்கள் அடமானம் வரைக்கும் சென்றுள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டார். அந்த நேரத்தில்தான் கபாலி வெளிவந்தது. அதனையடுத்து எந்திரன் 2 ரெடியாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் அப்போது நடந்தது. பின்னர், திடீரென ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்தானது. அதில் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.
தனித்தனியாக போட்டோ
பின்னர் அது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறியபோது, ‘‘ரசிகர்களைத் தனித்தனியாகச் சந்தித்து போட்டோ எடுப்பது கடினமாக இருப்பதால், தற்போது நிகழ்வை ரத்து செய்கிறேன். வரும் காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அல்லது 2 மாவட்டமாக திட்டமிட்டு அவர்களை அழைத்து, தனித்தனியாக போட்டோ எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். விரைவில் அந்நிகழ்வு இருக்கும்'' என்று கூறியிருந்தார்.
வரும் 15ம் தேதி நேரில் ரஜினி சந்திப்பு
இந்நிலையில், ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ரஜினி காந்த் வரும் 15ம் தேதி தொடங்க இருக்கிறார். மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இந்த முதல்கட்ட சந்திப்பு நிகழ்ச்சி 19ம் தேதி வரை நடக்கிறது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முதலில் 15 மாவட்டங்கள்
இதில் முதல் கட்டமாக, கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை அவர் நேரில் சந்திக்கிறார். ஒவ்வொருவருடனும் தனித்தனியாக போட்டோவும் எடுத்துக்கொள்கிறார்.
அரசியல் பிரவேசம்
1996ம் ஆண்டு முதல் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடவுள்ளார் என்று அவ்வப்பொழுது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.பின்னர் அப்படியே அது அடங்கிவிடும்.ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அப்படியேதான் உள்ளது.
இந்த முறையாவது அரசியலில் குதிப்பார் ரஜினி?
தமிழக அரசியலில் பெரிய அளவுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடம் ரஜினியால் நிரப்பப்படும் என்று அவரின் ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இந்த முறையாவது அவரின் அரசியல் பிரவேசம் நிகழுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.