ஜோக்கர் பட விழாவில் 'ஆண்டிகள்' பேச்சுக்கு நடிகர் சிவகுமார் வருத்தம்!
சென்னை: ஜோக்கர் பட விழாவில் 'ஆண்டிகள்' என குறிப்பிட்டு பேசியதற்கு ஆண்டி பண்டாரம் சமூகத்தினரிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.
ஜோக்கர் பட விழாவில் 'ஆண்டிகள்' போல வாழ்ந்தவர்கள் என இயக்குநர் ராஜூமுருகனையும் நாயகன் சோமசுந்தரத்தையும் சிவகுமார் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் ஆண்டி பண்டாரம் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் சிவகுமார் தம்முடைய பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் நடிகர் சிவக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு ஊர் ஊராக அலைந்து, பந்த பாசம் துறந்து வாழ்ந்தவர்கள் டைரக்டர் ராஜுமுருகனும், ஹீரோ குரு சோமசுந்தரமும். அகோரிகள், பாலைவனத்தில் வசிப்பவர்கள் என பலரோடு தங்கி அனுபவம் பெற்றவர்கள் என்பதைச் சொல்லும்போது ஆண்டிகளாக வாழ்ந்த இரண்டு பேர் சேர்ந்து 'ஜோக்கர்' படம் எடுத்திருக்கிறார்கள் என்று பேசியிருந்தேன்.
இறைவன் படைப்பிலே அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான்.. நான் அறியாமல் பேசியது ஆண்டிப்பண்டாரம் என்று ஒரு பிரிவு மக்களை நோகச் செய்திருக்கிறது என்று தெரிவிப்பதால், அவர்கள் மனதைப் புண்பட வைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications