வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக ஆளுநரிடம் புகார் செய்வேன்: விஷால்
வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்க ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்.க.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் திங்கள்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நேற்று ஆய்வு செய்தார்.
காலை முதல் விஷாலின் வேட்புமனுவை நிறுத்தி வைத்துவிட்டு மாலைக்கு மேல் அவருக்கு முன்மொழிந்த இருவர் தங்களின் கையெழுத்து இல்லை என்று கூறியதால் வேட்புமனுவை நிராகரிப்பதாக வேலுச்சாமி அறிவித்தார். இதையடுத்து விஷால் சாலை மறியல் போராட்டம் நடத்தி அதிகாரி வேலுச்சாமியிடம் தான் எதற்காக போட்டியிடுகிறேன் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் வேட்புமனுவை ஏற்பதாக வேலுச்சாமி கூறிவிட்டதாக செய்தியாளர்களிடம் விஷால் தெரிவித்தார். இதையடுத்து 2 மணி நேரம் கழித்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
இந்த பிரச்சினை சர்ச்சைக்குள்ளானதை அடுத்து தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி சந்தித்து விளக்கம் அளித்தார். அதேபோல் விஷாலும் தனது வேட்புமனு நிராகரிப்பு குறித்து லக்கானியிடம் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்றைய தினம் தேர்தல் அலுவலகத்தில் நடந்தவற்றை லக்கானியிடம் கூறியுள்ளேன். எனது வேட்புமனுவை பரிசீலிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்தேன்.
எனது வேட்புமனுவை நிராகரித்ததை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளேன். மேலும் எனது மனுவை முதலில் ஏற்பதாக அதிகாரி அறிவித்ததை அங்குள்ள கேமராக்களில் ஆய்வு செய்யுமாறு கூறியுள்ளேன்.
இது தொடர்பாக லக்கானியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளேன். விரைவில் ஆளுநரை சந்தித்து முறையிடுவதற்காக நேரம் கேட்டுள்ளேன் என்றார் விஷால்.