அப்படியே ஃபீனிக்ஸ் பறவை மாதிரி முதல்வர் வருவாங்க.. நமீதா நம்பிக்கை
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா ஃபீனிக்ஸ் பறவை போன்று மீண்டு வருவார் என்று நடிகை நமீதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஒரு மாதத்திற்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அப்போலோ சென்று நடிகை நமீதா விசாரித்தார்.
கடந்த 22ம் தேதி அன்று அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அது தொடர்பான சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை அளித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், டெல்லியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும், நடிகர்கள், நடிகைகள், ஜெயலலிதாவின் சக நடிகைகள் என பலரும் ஜெயலலிதாவின் நலம் குறித்து விசாரித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்த நமீதா, மருத்துவமனையில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, முதல்வர் ஜெயலலிதா ஃபீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருவார் என்றும், அவர் உடல் முழு நலம் பெற்று மீண்டும் பணிக்கு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.