அதிசய ராகம்.. அழகிய ராகம்.. அபஸ்ருதி ராகம்.. மறக்க முடியாத நடிகை ஸ்ரீவித்யா
நடிகை ஸ்ரீவித்யா நினைவு நாளை ரசிகர்கள் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: பண்பட்ட, பக்குவப்பட்ட நடிப்பை தன் விழியழகால் வெளிப்படுத்தி தென்னிந்திய திரையுலகத்தையே ஈர்த்த நடிகை ஸ்ரீவித்யாவின் நினைவுநாள் இன்று.
கர்நாடக இசையின் தேவகானக்குயில் எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள். இசை, நாட்டியம், இரண்டையுமே சிறுவயதிலேயே கற்ற ஸ்ரீவித்யா சினிமா உலகினரால் வித்தி என அன்போடு அழைக்கப்பட்டார். கதாநாயகி வயதினில் இருக்கும்போதே அதாவது தன் 23 வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா.
துல்லியமான நடிப்பு
அதுவும் ஒரு கைகுழந்தைக்கோ, சிறுமிக்கா அல்ல, வயது வந்த ஜெயசுதாவிற்கு "அபூர்வராகங்க"ளில். சுமார் 30 ஆண்டுகள் மிகத் துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு, பேசும் விழிகளாலும், ரசிகர்களை தன் பிடியில் வைத்திருந்தார் ஸ்ரீவித்யா. சகல அம்சங்களும் பொருந்தி நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒரு சிலரே. அதில் முக்கிய இடம் ஸ்ரீவித்யாவுக்குத்தான் போய்சேரும்.
காலை சுற்றிய பாம்பு
தங்கையாய், காதலியாய், மனைவியாய், தாயாய், அண்ணியாய், தோழியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர். மணவாழ்க்கையில் கசப்பு கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனமே அவரது வாழ்க்கையை புரட்டி போட வைத்தது. 35 வயதுக்கு பின்னர், மணவாழ்க்கையில் விதி விளையாட துவங்கியது. சறுக்கி விழுந்தார்... 9 வருட கால போராட்டத்துக்கு பின்னர் தனித்து வாழ்ந்தாலும், காலை சுற்றின பாம்பு கூடவே இருந்தது.
தலையெழுத்து.. விதி
குழந்தையிலிருந்து ஸ்ரீவித்யாவுக்கு இருக்கும் ஆன்மீக ஈடுபாடு அவரை பண்படுத்தின. பக்குவப்படுத்தியன. நடிப்பில் கவனத்தை செலுத்தினார். பல படங்களில் அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது. ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அடியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. அழகிய மேனியையும் அற்புத குரலையும் சின்னாபின்னபடுத்தி சீரழித்து சிரித்தது தலையெழுத்து... லட்சக்கணக்கான ரசிகர்களை அழவைத்துப் பார்த்து ரசித்தது விதி..
சூன்யமான வாழ்க்கை
பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. தனிமை, ஏகாந்தம் என்ற வட்டத்துக்குள் சூழ்நிலை கைதியின் நிலைக்கு ஆளானார். அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். அதனை நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை. சொத்துக்களின் கதி இதுவரை என்னவென்றும் தெரியவில்லை. அதில் ஊசி முனையளவும் நகரவில்லை என்பதே கொடுமையின் உச்சம்!!
கண்கலங்கிய கமல்
நோயால் அவதிப்பட்ட ஸ்ரீவித்யாவை யாருமே சென்று பார்க்க அனுமதி இல்லை.. ஆனால் ஸ்ரீவித்யா கடைசி நாட்களில் பார்க்க விரும்பியது தனது நண்பர் கமலஹாசனைதான்!! இவர்கள் இருவரை பற்றியும் எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் திரையுலக காலில் சக்கரம் கட்டி பறந்தன. ஆனால் அதையும் தாண்டி, புரிதல் என்ற நட்பு பாதையில் பயணித்த ஸ்ரீவித்யாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார் கமல். பாசத்தையும், நட்பையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் இருவரும். ஸ்ரீவித்யாவின் தோற்றத்தை கண்டு கண்கலங்கி நின்றார் கமல். ஸ்ரீவித்யாவும்தான்!!
இறவா நட்பு
அவரை சந்தித்துவிட்டு மருத்துவமனை விட்டு வெளியே கமலிடம், புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கமல், "உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம்" என்று சொன்னார். பிறகு விரைவிலேயே ஸ்ரீவித்யா மரணத்தை பற்றி சொன்ன கமல், " அவள் இறந்தாலும் இறவா நட்பு" என்றார். கமலின் மறக்கமுடியாத ஒரே தோழி ஸ்ரீவித்யாவாகத்தான் என்றென்றும் இருக்க முடியும்.
உயிலே சாட்சி
காலத்தின் கோலம் திரைத்துறையில் எப்பேர்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் சிக்குண்டு போய்விடுகிறார்கள் என்பதும், காலம் அவர்களை ஒரு புரட்டு புரட்டியே போட்டு தன்னுடன் அழைத்து சென்றுவிடுகிறது என்பதற்கும் ஸ்ரீவித்யா சிறந்த உதாரணம். அவர் எந்த அளவிற்கு விசால மனம் படைத்தவர் என்பதற்கும், அவரது மாபெரும் மனித நேயத்திற்கும், நாட்டியக்கலை மீது இருந்த பற்றுக்கும் அவர் எழுதி வைத்த உயிலே சாட்சியாகும்.
துரதிர்ஷ்டமே
மரணப் படுக்கையிலும் வசதியற்றவர்களுக்கு உயில் எழுதிய உன்னதம் ஸ்ரீவித்யா தவிர வேறு யாருக்கும் வராது. இதமான இதயத்தை அது பிரதிபலித்தது. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒருவர் அவருக்கு கணவராக இருந்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். தாய்மையடைந்த போதெல்லாம் அந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்ட இந்த திரைத்தாயினால் கடைசிவரை நிஜத்தாயாக வாழமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே!