பீதி கிளப்பும் டெங்கு.. நெல்லை ஜிஎச்சில் கூடுதல் வார்டுகள் திறப்பு
டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால், நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கூடுதல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி பகுதியில் அடுத்தடுத்து இரு நாட்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ஐகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து தினமும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் சதம் அடித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் ஒரு படுக்கையறை பிரிவு முழுவதும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் நெல்லை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உயிரிழப்பை தடுக்க தேவையான கூடுதல் மருந்துகளை தயாரா் நிலையில் வைத்திருக்க டாக்டர்களை அவர் உஷார் படுத்தியுள்ளார்.