இபிஎஸ் அணியின் 'ஆபரேஷன் சிக்னேச்சர்'... இணைப்பு தள்ளிப்போவதற்கு இது தான் காரணமாம்!
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரங்களைப் பெற மாநிலம் முழுவதும் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக கையெழுத்து வாங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலா, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தும், எடப்பாடி அரசே தொடரவும் கையெழுத்து பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுக அம்மா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அதிமுக புரட்சித் தலைவி அம்மா ஆகிய இரண்டு பேரும் கட்சியின் பெயருக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரினர். இரு தரப்பினரையும் அழைத்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது, சசிகலா நியமனம் செல்லாது என்பதால் தங்களுக்கே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது,
நாங்கள் தான் அதிமுக என்று சசிதரப்பு கூறியது இதனால் இருதரப்புக்குமே சின்னத்தை ஒதுக்காமல் தேர்தலை சந்திக்க ஆணையம் உத்தரவிட்டது.
அவகாசம்
பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத்தேர்தலும் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சின்னத்தை பெறுவது தொடர்பாக ஜுன்16ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய இருஅணிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
முந்தி கொண்ட ஓ.பிஎஸ்
அதிமுக இரு அணிகளின் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இரு தரப்பும் கூறி வருகிறது. இந்த நிலையில், ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பது போல ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 6 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மா.செ கூட்டம்
இதனிடையே சசிகலாவும் தினகரனும் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில் முதலமைச்சரும் கட்சியின் அமைப்புச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கடந்த 3 நாட்களாக சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த 3 நாள் கூட்டத்தில் சின்னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஏராளமான கையெழுத்துகளுடன் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சின்னம் கிடைக்க ஏராளமான வாய்ப்பு இருப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இருக்கும் அவகாசத்திற்குள் மாநிலம் முழுவதும் சசிகலா, தினகரன் மற்றும் எடப்பாடி அரசுக்கு ஆரவான பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்து பெறும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தொடர்பில்லை
அதேநேரத்தில் இணைப்புக் குழுவில் உள்ள ஒரு தலைவர், கோஷ்டிகள் இணைப்புக்கும் இந்த கையெழுத்திற்கும் தொடர்பில்லை என்றும், தங்கள் தரப்புக்கு தொண்டர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை தேர்தல் ஆணையத்துக்கு நிரூபிக்கும் வகையிலேயே கையெழுத்து இயக்கம் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூட்டம் முடிந்த கையோடு அடுத்த அசைன்மெண்ட்டோடு சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர் அதிமுக மாவட்ட செயலாளர்கள்.